என்னால முடியாது! பாப்பா மலர்


என்னால முடியாது!

காலை வேளை! ஏய் சுதா! அங்க என்ன பண்றே? இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வை! வா இங்க வேலை நிறைய இருக்கு! சதா புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா எல்லா வேலையும் ஆகிடுமா? என்று குரல் கொடுத்தாள் சுதாவின் தாய் விஜயா.
   “என்னால முடியாது! ரமா என்ன பண்றா? அவளை கூப்பிட்டு கழுவச் சொல்லு! இந்த வேலையெல்லாம் எனக்குத் தெரியாது! பிடிக்கவும் பிடிக்காது! என்று மறுத்தாள் சுதா.
   ஆமா! வேலைன்னாலே உனக்கு கஷ்டமா இருக்கு! இந்த வயசுல கத்துகிட்டாத்தானே நாளைக்கு உதவும். எல்லா வேலையும் ரமாவே செஞ்சிகிட்டு இருந்தா நீ எப்ப கத்துக்கிறது? முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும் போகபோகப் பழகிடும். வாம்மா! சுதா கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா!
      அதெல்லாம் முடியாது ரமாவை கூப்பிட்டுக்க நான் காமிக்ஸ் படிச்சிகிட்டு இருக்கேன் என்று கதை புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.
   அவ தண்ணி கொண்டு வர போயிருக்கா! உன்னால முடியுமா முடியாதா? அம்மா கத்த என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்லே ஏன் தொந்தரவு பண்றே? என்று மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.
   பாவம் ரமா அவளையே எவ்வளவு வேலை வாங்கறது அவ தண்ணி எடுத்து வர போயிருக்கா! ஒரு நாளாவது நீ எடுத்து வந்திருக்கியா அட்லீஸ்ட் ஒரு குடமாவது! ஆனா வீட்ல நீதான் அதிக தண்ணி செலவழிக்கிற ஆளு! நேரம் ஓடுது கொஞ்சம் ஹெல்ப் பண்ணாத்தான் என்ன?
   அதெல்லாம் எனக்குத் தெரியாது! நானா அவளை தண்ணி கொண்டு வரச் சொன்னேன். அவளாலே முடியலைன்னா முடியலைன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே!
 இனி இவளோடு பேசிப் பயனில்லை என்று தானே பாத்திரம் கழுவி முடித்தால் தாய். இவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது எனவும் யோசிக்க ஆரம்பித்தாள்.
   மறுநாள் காலை சுதா பள்ளிக்குச் செல்ல குளித்துவிட்டு ஆடைகளை எடுத்தாள் அவை துவைக்கப் படாமல் அழுக்காக இருக்க அம்மா ட்ரெஸ்ஸ துவைக்கலையா? என்றாள்.
   என்னால முடியாதும்மா இனி உன் டிரெஸ் துவைக்க! நேத்து நீதானே சொன்னே? முடியலைன்னா முடியலைன்னு சொல்லிட்டுப் போன்னு! அதான் துவைக்க முடியலைம்மா சொல்லிட்டேன் என்றாள் தாய்.
   கண்களில் நீர் மல்க அழுக்கடைந்த துணியை போட்டுக் கொண்டு ரமா தலையை வாரி விடேன் என்றாள்  ஐயையோ என்னால முடியாதும்மா! எனக்கு கையெல்லாம் வலிக்குது என்றாள் ரமா.
  வேறு வழியின்றி தானே பின்னிக் கொண்டு அழுக்கான டிரெஸ்ஸோடு பள்ளிக்கு சென்றாள் சுதா. அங்கே அழுக்கு துணிபோட்டு வந்ததால் வெளியே நிறுத்தினர். மதிய உணவு இடைவேளையில் தன் பையில் டிபன் பாக்ஸை தேடிய சுதா அதிர்ந்தாள்.
  அங்கு டிபன் பாக்ஸ் இல்லை! வழக்கமாக அம்மாதான் பையில் வைப்பது இன்று வைக்கவில்லை போலும் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மாலையில் சோர்வோடு வீடு திரும்பியவள் அப்படியே படுக்கையில் விழுந்தாள்.
   அப்போது அங்கு வந்த அவள் தாய் சுதா! ஒரு நாள் எங்க உதவியில்லாம உன்னால சமாளிக்க முடியலை பார்த்தியா? நானும் ரமாவும்தான் உன்னோட வேலையெல்லாம் பார்த்து பார்த்து செய்யறோம். பதிலுக்கு ஒரு சின்ன உதவி கேட்டாலும் நீ செய்ய மறுக்கிறே? உன் வேலைகளோட வீட்டு வேலைகளையும் செய்யற எங்களுக்கு நீ இந்த சின்ன உதவி கூட செய்யலைன்னா எப்படி? நாங்க உன்னோட வேலைகளை செய்யாத போது உன் கதி என்னாச்சு பார்த்தியா? இது போல வீட்டு வேலைகளை செய்யாம விட்டா வீட்டோட கதி என்னாகும்னு யோசிச்சுப் பார்! அழாதே வா சாப்பிடலாம் காலையில சாப்பிட்டவள் ரொம்ப சோர்வா இருக்கே! என்று அவளை வருடிக் கொடுத்தாள் அந்த தாய்.
   அம்மா என்னை மன்னிச்சுடும்மா! இனி கட்டாயம் வீட்டு வேலைகளில் என்னோட பங்கும் இருக்கும் என்று அன்னையை அணைத்துக் கொண்டாள் சுதா.

அறவுரை!

ஏலாதி

இடர்தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறும்சொல் காணின் கல்வியின்கண்
விண்டவர் நூல் வேண்டா விடும்.


விளக்கம்}   பிறர் துன்பம் நீக்குதல் மற்றவரை இகழாமை கீழ்மக்களுடன் சேராமை பசித்துண்பம் நீக்குதல் தீய ஒழுக்கத்தை கைவிடல் பழகுபவர் விரும்பும் சொற்களை பேசுதல் எனும் இவ்வாறு பழக்கங்களை மேற்கொள்பவன் கற்றவருக்கு நிகரானவன் ஆவான்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் பானு அதையா.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!