என் இனிய பொன்நிலாவே! பகுதி 6

என் இனிய பொன் நிலாவே!
              ‘ப்ரியம்வதா’
                      பகுதி  6

முன்கதை சுருக்கம்} மதுமிதா இக்கால இளைஞி, அவளை காதலிப்பதாக சொல்லும் அவளது முதலாளி அபிஷேக் அவளை தன்னுடன் காரில் ஏற்றிவந்து விடும் சமயம் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.
   இனி}   ஏ..ஏய் ஸ்வேதா! உனக்கு எத்தனை முறை சொல்வது பொது இடங்களில் இந்த மாதிரி நடந்து கொள்ளாதே என்று! இவள் என் பர்செனல் செகரட்டரி, நீ வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு போகிறாயே! என்று அவளை கண்டித்தான் அபிஷேக்.
  ஆனால் அந்த ஸ்வேதாவோ கொஞ்சமும் அதை லட்சியம் செய்யாமல் இப்போ என்ன குறைந்து விட்டது! கேவலம் உன்னிடம் சம்பளம் வாங்குபவள் தானே! உன்னிடம் வாங்கினால் என்ன? என்னிடம் வாங்கினால் என்ன? என்ன இருந்தாலும் நான் உன் வருங்கால மனைவியாகப் போகிறவள் இல்லையா என்னிடம் திட்டு வாங்கினால் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டாள் என்று சொல்லிக் கொண்டே போக அபிஷேக் தலையில் அடித்துக் கொண்டான்.
   சாரி சாரி ஐயம் சாரி மது! என்று அவன் சொல்ல இருக்கட்டும் மிஸ்டர் அபிஷேக் இருந்தாலும் உங்கள் மனைவிக்கு ஐ மீன் உங்கள் வருங்கால மனைவிக்கு கொஞ்சம் நாகரீகத்தையும் கற்றுத் தாருங்கள் என்று வருங்கால மனைவி என்பதை கொஞ்சம் அழுத்தி சொல்லியவள் பதிலை எதிர் பாராமல் நடந்தாள்.
   அவளது இந்த எதிர் பாரா தாக்குதலை சமாளிக்க முடியாமல் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் காரினுள் ஏறியிருந்தாள் ஸ்வேதா. அபி ஏன் அப்படி திகைத்து நிற்கிறாய்? கமான் வா வண்டியை எடு என்று அவனை கூப்பிடவும் செய்தாள்.
   ஏய் உனக்கு அறிவிருக்கிறதா? எல்லோரிடமும் என்னை உன் வருங்கால கணவன் என்று சொல்வதை முதலில் நிறுத்து! என்று எரிந்து விழுந்தான் அபிஷேக்.
  நான் என்ன அப்படி தப்பாக சொல்லிவிட்டேன். நம் இருவீட்டாரும் கூடி முடிவெடுத்ததை தானே சொன்னேன். ஆமாம் கிழித்தார்கள்! அதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்று அன்றே சொல்லிவிட்டேன் அல்லவா?
   ஆனால் நான் உங்களை விரும்புகிறேன் அத்தான்!
  சே! முதலில் இப்படி அழைப்பதை முதலில் நிறுத்து! சொந்தங்களில் திருமணம் என்றாலே எனக்கு பிடிக்காது! உன்னை மணந்துகொள்ள உன் வீட்டார் நச்சரித்த போதும் தெளிவாக சொல்லி அனுப்பினேனே! உன்னிடம் அவர்கள் சொல்லித் தொலைக்கவில்லையா? இன்று நந்தி மாதிரி வந்து குறுக்கெ நின்று.. இனியும் இப்படி சொல்லித் திரியாதே! அது உனக்கு மட்டுமல்ல எனக்கும் நல்லதல்ல! போகட்டும் இப்பொழுது நீ எங்கே போகவேண்டுமென்று சொல்லி தொலைக்கிறாயா என்றான் அபிஷேக்.
    அபி என்னை கைவிட்டு விடுவதாக மட்டும் சொல்லி விடாதீர்கள்! நான் உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.கற்பனையில் என்னென்னமோ நினைத்துக் கொண்டுள்ளேன். நீங்களானால் அந்த பிச்சைக் காரியை மனதில் கொண்டு என்னை கழற்றி விடுகிறீர்கள்!
   என்ன சொன்னாய்? பிச்சைக்காரியா! நீ மட்டும் என்ன கோடிஸ்வரி குடும்பத்தில் உதித்தாய் என்று நினைப்போ? உன்னை காரில் ஏற்றியதே மகா தப்பாகிவிட்டது! மரியாதையாக இறங்கிக் கொள்கிறாயா? என்று கதவை திறந்தான் அபிஷேக்.
  அபி உங்களை அந்த மாய்மாலக் காரி வசியப் பொடி தூவி ஏமாற்றிவிட்டாள். அவளை சும்மா விடப் போவதில்லை! அத்துடன் மணந்தால் உங்களைத்தான் மணப்பேன். இப்போது அனாவசியமாக சண்டை போட விரும்பவில்லை அதனால் இத்துடன் வருகிறேன் என்று காரை விட்டு வேகமாக இறங்கி போனாள் ஸ்வேதா.
   அவள் இறங்கியதும்தான் தாமதம். அந்த கார் வேகமெடுத்து பறந்தது.வேகமாகச் செல்லும் காரையே முறைத்துப் பார்த்தாள் ஸ்வேதா! வளமானவன் அழகானவன் இவனை மணந்து கொண்டால் காலம் முழுவதும் கவலையின்றி இருக்கலாம்  என்று போட்ட திட்டமெல்லாம் திடீரென்று புதிதாக முளைத்த ஒருவளால் அழிந்து போவதா? விடமாட்டேன்.என்று சபதமிட்டவள் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிப்போனாள்.
 இவர்கள் இருவரும் போவதற்கு முன்பே முதலில் சென்ற மதுமிதா இப்போழுது வீட்டு வாசலை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. சே என்ன ஒரு கேவலமான பார்வை அவளுக்கு பிச்சைக்காரி என்று சொல்லிவிட்டாள். அதை பார்த்துக் கொண்டு இவன் சும்மா நிற்கிறானே! சாரி கேட்டுவிட்டால் போதுமா அவளை நாலு விளாசு விளாசி இருக்க வேண்டாமா? அதை விடுத்து குழைகிறானே!
   அவள் வருங்கால மனைவி என்றல்லவா சொன்னாள்? அவளை மணந்து கொண்டால் அவன் வாழ்க்கை அதோகதிதான்! தாயே சரணம் என்று சரணாகதி அடைய வேண்டியதுதான் என்று நினைத்தவள் தன்னையே நொந்து கொண்டாள் அவன் யாரை மணந்தால் என்ன? நான் ஏன் இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று மனதை வேறு வழியில் செலுத்த முயற்சித்தாள்.அதற்குள் வீடும் வந்து விட உள்ளே நுழைந்தாள்.
   நுழைந்ததும் நுழையாததுமாக பிலு பிலு வென பிடித்துக் கொண்டாள் அவள் தாய். என்ன பொண்ணுடியம்மா நீ காலையில இண்டர்வியூவிற்கு போனவ இப்ப வந்து நிக்கிற ஒரு போன் பண்ணக் கூடாதா? காலம் கெட்டுக் கிடக்கு பெத்த வயிறு இங்க தவியா தவிச்சிகிட்டு இருக்க சாவதானமா எட்டு மணிக்கு வந்து நிற்கிறயே என்றாள்.
   அம்மா உன் புராணத்தை ஆரம்பிச்சிட்டியா? இன்னும் அந்த காலத்திலேயே இருக்கியே? மணி எட்டுதானே ஆகுது. இதுக்கே பயந்தா எப்படி நான் வேலையில சேர்ந்த்துக்கு அப்புறம் தினம் எவ்வளவு மணி நேரம் ஆகுமோ? அப்ப என்ன பண்ணுவே? என்றாள் மது.
   அப்படின்னா உனக்கு வேலை கிடைச்சுடுச்சுன்னு சொல்லு!
  ஆமாம்மா! ஆனா அந்த வேலைக்கு நான் போக வேணாமுன்னு பார்க்கறேன்!
  என்னடி இது அபசகுனமான பேச்சு! வேலை கிடைக்கிறது குதிரை கொம்பாக இறுக்கிற காலத்தில கிடைச்ச வேலையை வேணாம்னு சொல்றே? ஏன் வேலை உனக்குப் பிடிக்கலையா? கஷ்டமான வேலையா?
  அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா!
  அப்ப எதுக்கு வேலை வேணாங்கிற?
இல்ல காரணமெல்லாம் தெரியலை! இந்த வேலை வேண்டாமின்னு தோணுது ப்ளிஸ் விடேன் காலையில வேலைக்கு போகணுமான்னு கேட்ட இப்ப என்னடான்னா இப்படி பேசற?
  நீ கூடத்தான் வேலைக்கு போயே தீருவேன்னு சொன்னே!ஆனா இப்ப கிடைச்ச வேலைய விடப்போறேன்னு சொல்றியே?
 நான் ஒண்ணும் வேற வேலை தேடாம இருக்க போறது இல்லியே?
 ஆனா புதுசா வேலை கிடைக்க இன்னும் எத்தனை நாளாகுமோ? கிடைச்ச வேலையை விடறது புத்திசாலித்தனம் இல்லை அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.
 சரிம்மா யோசிக்கிறேன்!
  எதை யோசிக்க போறேம்மா! என்று உள்ளே நுழைந்தார் அவளது தந்தை. இன்னிக்குப் போன இண்டர்வியுவில செலக்ட் ஆகி வேலையும் கிடைச்சிடுச்சு ஆனா வேலைக்கு போகலைங்கிறா? என்றாள் அன்ன பூரணி.
  ஏம்மா எதாவது பிராப்ளமா? நீ வேலைக்கு போகணும்கறது கட்டாயமில்லே!  என்ற விநாயகம் நீ அவளை தொந்தரவு செய்யாதே முதல்ல சாப்பாட்டை போடு என்று மனைவியை பணித்தவர் உள்ளே சென்று விட்டார்.
  அன்று இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு காலையில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வர புன்னகைத்துக் கொண்டாள். அந்த அபிஷேக்கை மணந்து கொள்ள போகிறவள் அதிருஷ்ட சாலி தான் என்று நினைத்தவள் தான் ஏன் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று குட்டிக் கொண்டாள் செல்போன் சிணுங்க எடுத்தாள் .ஒன் மெசேஜ் ரீசிவிங் என்றிருக்க ரீட் என்பதை அழுத்த குட்நைட்  அபிஷேக் என்றிருக்க யார் இவன் எனக்கு குட்நைட் சொல்ல என்று செல்போனை தூக்கி எறிந்தாள்.
    நிலவு வளரும்(6)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!