கண்ணீர் விட்ட கனிமொழி! கதறி அழுத ராஜாத்தி! அதிர்ச்சியில் கருணாநிதி!

டெல்லி: இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்து வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்த கனிமொழி ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் கண்ணீர் விட்டார். கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மகளைப் பார்த்து ராசாத்தி அம்மாள் கதறி அழுததால் கோர்ட்டே சோகமயமானது.

2ஜி ஊழல் வழக்கில் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த 5 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். ஏற்கனவே 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழியும், அவரது குடும்பத்தார் மற்றும் திமுகவினர் நம்பினர்.

இதனால் கனிமொழியை வீ்ட்டுக்கு அழைத்து வருவதற்காக அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, தாயார் ராசாத்தி அம்மாள், சகோதரர் மு.க. ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் டி. ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லி சென்றனர். நடிகை குஷ்பூவும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் கனிமொழிக்கு இன்று மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த திமுகவினர் மற்றும் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கனிமொழிக்கு கண்ணீர் பொங்கி வந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தார். அதைப் பார்த்த ராசாத்தி அம்மாள் கதறி அழுதார். அம்மா அழுவதைப் பார்த்த கனிமொழியும் உடைந்து போய் அழுது விட்டார்.

பின்னர் கனிமொழியை போலீஸார் திஹார் சிறைக்குக் கொண்டு சென்றனர்.



 
 
 
சென்னை: கனிமொழிக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டு விட்டதால் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும், விரக்தியும் அடைந்துள்ள திமுக தனது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நவம்பர் மத்தியில் கூட்ட முடிவு செய்துள்ளது. மேலும் காங்கிரஸுடனான உறவு கெடாது என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இந்த செயற்குழுவில் என் முடிவெடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கனிமொழி விவகாரம் தொடர்பாக எந்த முடிவையும் துணிகரமாக எடுக்க முடியாத மாபெரும் இக்கட்டான நிலையி்ல் உள்ளது.

2ஜி வழக்கின் தொடக்கத்திலிருந்தே திமுகவுக்கு பெரும் நெருக்கடி தொடங்கி விட்டது. இந்த சிக்கல் அதிகரித்து அதிகரித்து தற்போது இடியாப்பச் சிக்கலாக மாறி நிற்கிறது. எந்த முடிவையும் எடுக்கவே முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்தில் திமுக மிரட்டிப் பார்த்தது. ஆனால் பின்னர் அதையும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது -கனிமொழி கைதின் மூலம். முள்ளில் சிக்கிய சேலையை பழுதில்லாமல் எடுக்கும் நிலையில்தான் தற்போது திமுக உள்ளது.

காங்கிரஸை சற்றும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் திமுக உள்ளது. மேலும் மத்திய அரசிலிருந்தும் வெளியே வர முடியாத நிலையில் உள்ளது. இதில் எதைச் செய்தாலும் பாதகம் நமக்குத்தான் என்பதால் திமுகவால் அந்த முடிவு எதையும் எடுக்க முடியவில்லை. கடைசி முறையாக டெல்லிக்கே சென்று சோனியா காந்தியைப் பார்த்து கனிமொழி விவகாரம் தொடர்பாக கோரிக்கை விடுத்துப் பார்த்தார் கருணாநிதி. அதற்குப் பலன் கிடைப்பது போல தெரிந்தது. ஆனால் சுப்ரீ்ம்கோர்ட்டின் கடும் கண்டனம் காரணமாக சிபிஐ பின்வாங்கி விட்டது. இதனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் போய் விட்டது.

இந்த நிலையில் நவம்பர் மாத மத்தியில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்று தெரியவில்லை. நிச்சயம் காங்கிரஸுடன் உறவு முறிவு, மத்திய ஆட்சியிலிருந்து விலகல் போன்ற முடிவுகள் எடுக்கப்படாது என்பது மட்டும் தெரிகிறது.

காங்கிரஸுடன் உறவு கெடாது

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னணியினர் கூறுகையில், இதனால் காங்கிரஸுடனான உறவில் பாதிப்பு வராது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

கடும் அதிர்ச்சியில் கருணாநிதி

இதற்கிடையே இந்த தீர்ப்பால் திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மூத்த மகள் செல்வி இன்று உடன் இருக்கிறார். கருணாநிதிக்கு அவர் ஆறுதல் கூறியதாக தெரிகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அழைத்து வருவதற்காக டெல்லி சென்றிருந்த ஸ்டாலின் இன்று அவசரமாக சென்னை திரும்புகிறார். அவர் வந்த பின்னர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2