என் இனிய பொன்நிலாவே பகுதி 17

என் இனிய பொன்நிலாவே  பகுதி 17

           ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்}மதுவை பெண் பார்க்க வந்தான் அபிஷேக். உடன் அவனது உறவுக்கார பெண் ஸ்வேதாவும் வந்தாள். அவள் மதுவை வெறுத்தாள்.

சர்வ அலங்காரத்துடன் கையில் காபி டிரேயுடன் வரும் மதுவை எரிச்சலுடன் பார்த்தாள் ஸ்வேதா. எங்கிருந்து வந்து எனக்கு போட்டியாக வந்து தொலைத்தாயாடி? கைக்கு எட்டியது என் வாய்க்கு எட்டாமல் பண்ணிவிட்டாயே? எப்படியாவது அபியை மணந்து பலகோடி சொத்துக்கு சொந்தக் காரி ஆகிவிடலாம் என்று நினைத்த என் ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டாயே? என்று கறுவிக் கொண்டிருந்தது அவளது மனம்.
  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள் ஆனால் ஸ்வேதாவின் முகம் அவள் நினைத்த எதையும் வெளிக்காட்டாமல் புன்னகைத்துக் கொண்டு இருந்தது.
 அனைவருக்கும் காபியை தந்து கொண்டிருந்த மதுவிடம் நீ என்னை இங்கு எதிர்பார்க்கவில்லைதானே! எப்படி எதிர்பாராமல் உனக்கு அதிர்ச்சி தந்தேன் பார்த்தாயா? இது இனி தொடரும் என்று பல்லிளித்தாள் ஸ்வேதா!
  சட்டென முகம் மாறினாலும் சுதாரித்துக் கொண்டு  ஆம் நீங்கள் வந்தது எனக்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்! இதுவே வேறு யாராக இருந்தாலும் வரமாட்டார்கள் நீங்கள் வந்து இந்த ஏழையை கவுரவித்துவிட்டீர்கள் என்று சூசகமாக பதில் உரைத்தாள் மது.
 என்னமாக பேசுகிறாள்! என்று ஒரு கணம் ஸ்வேதாவே பிரமித்துவிட்டாள் இவளிடம் எப்படியும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள்.
  பெண்பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிந்தது ஸ்வேதாதான் அசட்டுத்தனமாக ஏதேதோ உளற மனோன்மணி அம்மாள் அவளை அடக்கிவிட்டார். வருகிற தையில் ஒரு நல்ல மூகூர்த்தம் பாருங்கள்! கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
   தைமாதத்திலேயா?
ஆம் நல்ல காரியத்தை ஏன் தள்ளி போடவேண்டும்?
இல்லை ஒரு மாதம் தானே இடையில் உள்ளது கல்யாண செலவுகளுக்கு பணம் புரட்ட வேண்டாமா? இழுத்தார் வினாயகம்.
உங்களை யார் செலவு பண்ணச் சொன்னது?
 என்னம்மா சொல்கிறீர்கள்? கல்யாணத்தை நான் தானே நடத்திக் கொடுக்கவேண்டும்? இல்லையென்றால் என் சொந்த பந்தங்கள் நாளைக்கு கேலி பேசுமே என்றார் வினாயகம்.
  கல்யாண செலவை பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதே இல்லை அதையெல்லாம் எங்கள் அபியே பார்த்துக் கொள்வான். நீங்கள் உங்கள் பெண்ணை அழைத்துவந்தால் போதும் என்றாள் மணோன்மனி.
  அதெப்படி அத்தை! பெண் வீட்டார்தானே கல்யாணம் செய்ய வேண்டும்.நல்லபடி செய்ய அவர்களுக்கு அவகாசம் வேண்டாமா? அவசரகதியில் ஏற்பாடுகள் செய்து நாளைக்கு ஒரு குறைஎன்றால் பெண்வீட்டாரைத்தானே சொல்வார்கள் என்றாள் ஸ்வேதா.
  அவளுக்கு இந்த கல்யாணத்தை தள்ளிப் போட்டு பின் எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று ஆசை. இதுதான் சாக்கு என்று சொல்லவும்,
 ஸ்வேதா உனக்கு எங்கள் குடும்ப வழக்கம் எப்படித் தெரியும்? எதுவும் தெரியாமல் இதில் நீ மூக்கை நுழைக்காதே என்று கடிந்து கொண்டாள் மனொன்மணி. இல்ல அத்தை!
  எப்போதிருந்து நான் உனக்கு அத்தை ஆனேன். கிண்டலாக கேட்டாள் மனோன்மனி.
  அ.. அது வந்து நீங்கள் என் அப்பாவை அண்ணா என்று தானே அழைப்பீர்கள் அப்படியானால் நீங்கள் என் அத்தைதானே!
  சரியாக கண்டுபிடித்தாய் போ! வயதில் மூத்தவரான  உன் அப்பாவை நான் பெயர் சொல்லியா அழைக்க முடியும். மரியாதைக்கு அழைக்கப் போய் நல்ல உறவுமுறை சம்பாதித்துக் கொண்டாயம்மா என்றூ கேலி பேசவும்  ஸ்வேதாவுக்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.
  சாரி ஆண்ட்டி! என்றாள்.
 தமிழை விட்டு ஆங்கிலத்திற்கு தாவிவிட்டாய்! சரி போகட்டும் என்னை எப்படியோ அழைத்துக் கொள் ஆனால் என் குடும்ப விசயத்தில் நீ அளவுக்கு அதிகமாக தலையிடாதே அது உனக்கு தெரியாத விசயம் என்று கண்டிப்புடன் கூறினாள் மனொன்மணி.
  இப்படி மூன்றாவது நபர் முன் என்னை அவமானப் படுத்துவதற்கு என்னை அழைக்காமலேயே வந்திருக்கலாம் அல்லவா? கண்களில் நீர் பொங்க கேட்டாள் ஸ்வேதா.
  நல்ல காரியம் நடக்கும் இடத்தில் அழாதே நீ சிறு பெண்! உனக்கும் மதுவின் வயதுதான் இருக்கும். பெரியவர்கள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயம் குறுக்கிடாதே என்பதற்குத் தான் சொன்னேன். மேலும் இவர்கள் மூன்றாவது மனிதர்கள் அல்ல. என் சம்பந்தி வீட்டார். சொல்லப் போனால் உன்னைவிட உறவு அதிகம் ஆகிவிட்டது. எனவே நீ கொஞ்சம் அமைதியாக இருக்கிறாயா? என்றாள் மனொன்மனி.
 ஸ்வேதாவிற்கு பெரும் அவமானம் ஆகிப் போய்விட்டது. எப்படியாவது இந்த பங்ஷனை நிறுத்திவிடலாம் இடையூறு செய்து விடலாம் என்று நினைத்தே அவள் கிளம்பி வந்தது. அது போலவே ஆரம்பம் முதலே குறுக்கீடும் செய்து வந்தாள். ஆனால் இந்த மனோன்மணி பெரும் முட்டுக் கட்டையை போட்டு அவள் வாயை அடைத்துவிட்டாளே!
  எப்படியாவது அபியை மணந்து கொண்டு இவள் கொட்டத்தை அடக்கி கொட்டிலில் அடைக்கவேண்டுமே இந்த கல்யாணம் எப்படியாவது நின்று விடக்கூடாதா என்று பிரார்த்தித்து கொண்டாள் அவள்.
 கடவுள் இப்படிப்பட்ட  வேண்டுகோளை லட்சியம் செய்யவில்லை போலும். அதனால் அவள் வேண்டிக் கொண்டது பலிக்கவில்லை. மனொன்மணி அம்மாள் தொடர்ந்து பேசினாள். சம்பந்தி நீங்கள் கல்யாண செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகளுக்கு நீங்கள் சவரனாய் இழைக்க வேண்டியதில்லை. எங்கள் குடும்பத்திற்கு ஒரு குலவிளக்குத்தான் தேவை.நகை பொம்மை தேவை இல்லை உங்களுடைய நிலவரம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் உங்கள் வசதிப்படி எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதும்.
 கல்யாண செலவு எங்களுடையது!. எங்கள் வழக்கப்படி பிள்ளை வீட்டார்தான் கல்யாணம் செய்து கொள்வார்கள். நீங்கள் பெண்ணை அழைத்து வந்தால் போதுமானது. என்றாள்.

  இல்லையம்மா இது நன்றாக இருக்குமா? நாளைக்கு யாராவது கூறினால் அசிங்கமாகிவிடாதா? என்றார் வினாயகம்.
 யாருக்கு நாம் பயப்பட வேண்டும். எங்கள் வழக்கப்படி நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம். இதில் யார் என்ன சொல்லப் போகிறார்கள். நீங்கள் எதற்கும் கவலைப் படவேண்டாம். நாளைக்கு ஜோசியரை கலந்து பேசிவிட்டு நாள் குறித்து அனுப்புகிறேன். இப்போது எங்களுக்கு தேவை உங்கள் சம்மதம்தான் என்றார் மனோன்மணி.
  சரிம்மா அப்போது உங்கள் இஷ்டம்! என்றார் வினாயகம்.
ஐயோ! இந்த கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடந்து விடுகிறதே என்று பொறுமினாள் ஸ்வேதா.
                      நிலவு வளரும்(17)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!