ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா?

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

சத்தான உணவுகள்

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது.

தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம்.

பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

பல்வலியை போக்க

பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும்.

வாய் துர்நாற்றம் போக

தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம்.

வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.

ஆரோக்கியம் அவசியம்

இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2