ம்ம்! இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்!!

வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் பிற பகுதிகளை போல சென்னையிலும் அரசு கேபிள் செயல்பட துவங்கும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சுப்பிரமணி சட்ட சபையில் அறிவித்துள்ளார். இதை படிக்கும் போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தனியார்கள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க வேண்டும். கேபிள் தொழிலில் ஒரு குடும்ப ஆதிக்கத்தினை ஒழிக்க வேண்டும் என்பதெல்லாம் சரி! ஆனால் இதுக்கு அவன் சரிப்பட்டு வருவானா? என்பது தான் என்னுடைய கேள்வி!
     கேபிள் தொழில் என்பது அரசு அலுவலகம் அல்ல! எந்த கோப்பையும் நகர்த்தாமல் உண்டு உறங்கி  நாற்காலியை தேய்த்து ஓசியில் ஏசி போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க! இது மக்களின் அன்றாட பொழுது போக்கு தொடர்பான தொழில். இதில் மக்கள்தான் மகாராஜாக்கள்! அவர்களுக்கு விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைக்குமிடத்திற்கு தாவி விடுவார்கள். அவர்கள் கேட்டதை கொடுக்க போட்டி போட்டு வருகின்றன எத்தனையோ தனியார் நிறுவனங்கள்! இந்த போட்டியை கருத்தில் கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் அரசு கேபிள் கார்பரேஷன்.
    ஆனால் அது செய்வது என்ன? தூங்கிக் கொண்டுஇருக்கிறது! அது சிறப்பாக செயல்படுவது போன்ற ஒரு மாயையை அரசு ஆதரவு நாளிதழ்கள்தான் பரப்பி வருகின்றது. ஆனால் அடுப்பில் உறங்கும் பூனையாகத்தான் கேபிள் கார்பரேஷன் உள்ளது. தனியாரிடம் இருந்த போது எக்கச்சக்கமான சேனல்கள் துல்லியமாக வந்தன. விரும்பியதை பார்க்கும் வசதி இருந்தது. தொழில்நுட்பமும் சிறப்பாக இருந்தது. அரசு கேபிளில் அந்த துல்லியம் இல்லை ஒரு 35முதல் 50 சேனல்களே பல ஊர்களில் ஒளிபரப்பு ஆகின்றன. இருபது சேனல்களுக்கு மேல் சேனல்கள் மழையில் நனைகின்றன. இதிலும் மக்கள் விரும்பும் சன் குடும்ப சேனல்களை அரசால் வழங்க முடியவில்லை! அது இல்லாமல் கேபிளா என்று ஆபரேட்டர்களிடம் மக்கள் சண்டை போட வேறு வழியில்லாமல் சன் டைரக்ட் மூலம் அந்த சேனல்களை லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள் வழங்கி வருகிறார்கள்.
     அரசு சொன்ன கட்டணம் 70 ரூபாய்தான்! ஆனால் கேபிள் ஆபரேட்டர்கள் வசூலிப்பது 100ரூபாய்! அதற்கான உடன்பாட்டை கேபிள் ஆபரேட்டர்கள் செய்து விட்டனர். ஓரு ஊரில் எத்தனை டிவிக்களுக்கு இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது என்பது அரசுக்கு தெரியுமா? தெரியாது ! கேபிள் ஆபரேட்டர்களுக்குத்தான் தெரியும்! அவர்கள் ஏற்கனவே தனியாரிடமிருந்து சேவை பெற்றபோது குறைத்து தான் இணைப்பு எண்ணிக்கையை கொடுத்திருப்பர். இப்போது அரசு என்றது சொல்லவே வேண்டாம் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்றாகி விட போகிறது. இன்னும் குறைத்து டிவி இனைப்புக்களை காட்டினால் அரசு என்ன செய்யும்? இதற்கான கண்காணிப்பு வசதி ஏதேனும் அரசிடம் உண்டா?
    மக்களின் வளர்ச்சியில் தான் அரசு பாடுபட வேண்டும் அவர்களின் வசதிகளுக்கு பாடுபட வேண்டியதின் அவசியம் என்ன? இப்போது சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் வழங்கப் படும் கேபிள் சேவை படு மட்டமாகத் தான் உள்ளது. இணைப்பு பழுதானால் உடனடியாக சரிசெய்வது கிடையாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக வசூல்! குறைவான சேனல்கள் துல்லியமற்ற ஒளிபரப்பு! விருப்ப சேனல்கள் கிடைக்காமை போன்ற குறைகளை இந்த ஆறுமாதமாக சரி செய்ய அரசு கேபிளால் முடியவில்லை! பலரும் இந்த அரசு கேபிள் வெறுப்பை ஏற்படுத்துவதாகவே கூறுகின்றனர். கேபிள் ஆபரேட்டர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாகவே இந்த அரசு கேபிள் அவசர கதியாக கருணாநிதியால் துவங்கி குடும்ப சமரசத்தால் கோணலாகி போன ஒன்று. அந்த பாசம் இப்போதும் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்கிறது.
   இதன் நிர்வாகமும் நிர்வாக இயக்குனரும் சரியில்லை! இதனால் அரசுக்கு கெட்ட பெயரே தவிர நல்லது ஒன்றும் நிகழப்போவது இல்லை! இது மக்களின் வாழ்வாதார தொழிலும் இல்லை! நம் மக்கள் ஒன்றும் ஏழைகளும் இல்லை! இந்த தொழிலை அரசு செய்வதால் எந்த பலனும் இல்லை என்பது என் கருத்து. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகளுடன் தனியாரிடமே இதை விட்டு விடலாம். வெட்டியாய் எதற்கு இந்த வீண் வேலை! சென்னையில் அரசு கேபிள் அவஸ்தை தேவையா? யோசிக்க வேண்டிய விஷயம்! ம்ம்! இதுக்கு அவன் சரிப்பட்டு வர மாட்டான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! திரட்டிகளில் வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

  1. அன்பு நண்பரே இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

    நன்றி

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!