சர்வ மங்களம் தரும் ஸ்ரீ வரலட்சுமி விரதம்!

சர்வ மங்களம் தரும் ஸ்ரீ வரலட்சுமி விரதம்!


 லக்ஷ்மீம் க்ஷீரஸ சமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீரங்க தாமேச்’வரீம் தாஸீ
பூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம்|
ஸ்ரீ மந்மந்த கடாக்ஷலப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்||

 ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வருகிற வெள்ளிக்கிழமையன்று வரலஷ்மி விரத பூஜையை அனுஷ்டிக்க வேண்டும். இந்த வரலஷ்மி பூஜையை செய்தாலே அஷ்ட லஷ்மிக்களையும் பூஜிப்பதால் ஏற்படும் பலன்கள் கிடைக்கும். அஷ்ட லஷ்மிக்களுடன் வரலஷ்மியையும் சேர்த்து ஒன்பது லஷ்மிகள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
   இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு தனம் தான்யம் ஆரோக்யம், ஸம்பத்து, ஸத்ஸந்தானம் தீர்க்க ஸௌமாங்கல்யம் யாவும் வரலஷ்மியின் அருளால் கிடைக்கும்.
   வரலஷ்மியை நம் வீட்டிற்கு வரவழைக்க வேண்டி குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் வீட்டை சாணத்தால் மெழுகி( இன்றைய காலத்தில் சுத்தமாக கிருமி நாசினிகள் கொண்டு அலம்பி) கோலமிட்டு வெள்ளையடித்து பூஜையறையில் கிழக்கு முக சுவற்றில் வரலஷ்மியின் படம் வரைந்து அல்லது அம்மனின் திருவுருவப்படத்தை ஒட்டி வைக்கவும்.
    நோன்பிற்கு முதல்நாள் மாலை விளக்கு ஏற்றும் முன் அந்த பூஜை அறையில் வரலஷ்மி வந்து அமர சிறு மண்டபமோ அல்லது விதானமோ அமைத்து அலங்கரிக்க வேண்டும். இயலாதவர்கள் மாவிலைகொத்து தோரணங்கள் பூச்சரங்கள் கட்டி அலங்கரிக்கலாம். பிறகு செப்புக் கலசம் அல்லது வெள்ளி கலசத்தில் அரிசி இட்டு நிரப்பிக் கொள்ளவேண்டும். அதில் வெற்றிலை பாக்கு ரூபாய் காயின்கள் எலுமிச்சைபழம் ஆகியவை போட்டு மேலே மாவிலை கொத்து சொருகி மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து புஷ்பத்தால் அலங்கரிக்கவும். அதன் மேல் அம்மன் பிம்பம் வைத்து அலங்கரித்து அதை ரேழி எனப்படும் ஹாலில் வைக்கவேண்டும்.
  அன்று மாலை ஏதாவது ஒரு நிவேதனம் செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். ஆரத்தி எடுத்து சுமங்கலிக்கு வெத்தலை பாக்கு பழம் கொடுக்க வேண்டும். பிறகு மறுநாள் அலங்கரித்த மண்டபத்தில் மனையில் நுனி வாழையிலையில் அரிசி பரப்பி வைக்க வேண்டும். ரேழியில் இருக்கும் அம்மன் கலசத்தை வரலஷ்மி தேவி மா இண்டிக்கு ராவே மா இண்டிக்கு என்று பாடி அழைத்து கலசத்தை எடுத்து சென்று அந்த மண்டபத்தில் இலையினுள் நிறுத்த வேண்டும்.
  அதன் பிறகு முறைப்படி பூஜை செய்து மங்களகரமான பாடல்களை பாடி ஸ்தோத்திரங்களை கூறி அம்மனை பூஜிக்க வேண்டும். பூஜையில் 9 நூல்களால் ஆனதும் 9 முடிச்சுக்கள் உள்ளதுமான சரடை தகுந்தவாறு பூஜித்து பூஜை முடிந்ததும் கணவன் அல்லது வீட்டில் உள்ள பெரியவரிடம் கொடுத்து வலது கையில் அணிய வேண்டும்

  இந்த பூஜையை தடங்கல் இன்றி நிறைவேற்றித்தருமாறு முதலில் விக்னேஸ்வர பூஜை செய்யவேண்டும்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
  பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

  கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

பூஜைக்கு தேவையான பொருள்கள்: மஞ்சள்பொடி, அரிசி, வாழைஇலை, எலுமிச்சம்பழம், சந்தனம், புஷ்பம், உதிரிபுஷ்பங்கள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பழவகைகள், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், அட்சதை, தேங்காய், வஸ்திரம், மஞ்சள்சரடுகள், நிவேதனத்திற்கு பொங்கல், பாயாசம், அப்பம், வடை, மோதகம், லட்டுகம், தயிர், பசும்பால், நெய், தேன்,
  குத்துவிளக்கு, காமாட்சிவிளக்கு, திரிநூல், ,மணி, பஞ்சபாத்திரம், தட்டு, தீபகால், தூபகால், மனை, தாம்பாளம், தீப்பெட்டி
    விரத பலன்கள்:
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2.
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3.
மங்கல வாழ்வு அமையும்.
4.
மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5.
கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)
மகாலட்சுமி காயத்ரீ :
ஓம் மஹாதேவ்யை வித்மஹே
விஷ்ணு பத்னீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்
அர்ச்சனை நாமாக்கள் :
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :
நன்றி தினமலர், தினமணி இணைய தளங்கள்

   சர்வ மங்களம் தரும் வரலஷ்மி விரதம் அனுஷ்டிப்போம்! வரலஷ்மியின் அருள் பெறுவோம்!

Comments

  1. விஸ்தாரமாக விவரித்துள்ளீர்கள்.
    அருமை. நானும் நேற்று மிகச் சுருக்கமாக
    பூஜை செய்து முடித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!