பித்ருக்களை திருப்தி படுத்தும் மஹாளய அமாவாஸ்யை தர்ப்பணம்!

பித்ருக்களை திருப்தி படுத்தும் மஹாளய அமாவாஸ்யை தர்ப்பணம்!



புரட்டாசி மாத அமாவாசைக்கு முன் வரும் கிருஷ்ண பட்ச பிரதமை முதல் அமாவாசை கழித்த பிரதமை வரை மஹாளய பட்சம் எனப்படும். இந்த பதினைந்து தினங்களில் நமது முன்னோர்கள் எமலோகத்தினை விட்டு வந்து நமது இல்லங்களில் தங்குவதாக ஐதீகம். எமலோகத்தை சுத்தப் படுத்த எமதர்மன் இவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் இவர்கள் தங்களுடைய வம்சத்தினர் இல்லங்களில் வந்து தங்குவதாகவும் இந்து ஆகமங்கள் கூறுகின்றன. இந்த தினங்களில் நாம் பித்ருக்களை முறைப்படி பூஜித்து சிரார்த்தம் தர்ப்பணங்கள், தான்யாதிகள் முதலியன செய்வதால் அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். நம்முடைய பித்ரு தோஷங்கள் விலகும். அதனால் தான் இந்த பதினைந்து தினங்களும் மஹாளய பட்சமாக கருதப்பட்டு தினமும் தர்ப்பணம் செய்ய சொல்கிறது சாஸ்திரங்கள்.
   ஆனால் இன்றைய இயந்திர உலகில் இதை கடைபிடிப்பவர்கள் சிலரே! இப்படி கடைபிடிக்காதவர்களும் மஹாளய அமாவாஸ்யை அன்று தன்னுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் முதலியன செய்து அவர்களின் கோபத்தில் இருந்து தப்பித்து ஆசிகளை பெறலாம்.
   புரட்டாசி மாத அமாவாசையே மஹாளயபட்ச அமாவாசையாகும். அதாவது சூரிய- சந்திர கிரகங்களின் சங்கமத்தில் தோன்றுகின்ற சோமாதித்ய (சோம + ஆதித்ய) யதி மண்டலத்தின் தோற்றமாகும்.
   மஹாளய பட்சத்தின் பதினான்கு திதிகளிலும், பித்ருக்கள் நடத்துகின்ற பூஜா பலன்களுக்காக பித்ருக்களின் தேவதையான ஸ்ரீமந்நாராயணனே சோமனாகிய சந்திரனையும் ஆதித்யனாகிய சூரியனையும் இயங்க வைத்து, யதி மண்டலத்தைத் தோற்றுவிக்கிறார். இதில்தான் பித்ருக்களுடைய ஜீவசக்தியை இறைவன் யதி மண்டலக் கலசமாய் ஆராதனை செய்து தருகின்றார்.

எவ்வாறு சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியைத் தொடங்குகிறாரோ, அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உற்பவிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசை யன்று, சர்வகோடி லோகங்களிலுமுள்ள மகரிஷி கள் உட்பட அனைத்து ஜீவன்களும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து, புண்ணிய நதிக்கரைகளிலும் சமுத்திரங்களிலும் மற்றும் காசி, ராமேஸ்வரம், கயை, அலகாபாத் திரிவேணி சங்கமம், கும்ப கோணம் சக்கரப்படித்துறை போன்ற புனித தலங் களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர். வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு தேவர்களே இந்நாளில் தர்ப்பணம் இடுகின்றனர் என்றால், மஹாளய பட்ச மகிமை சொல்லவும் அரிதன்றோ

   நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத் திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற் றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.

   பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.
 மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது
தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது


  பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகி றாள். இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத்தாலும், அந்தப் பிறவியில் அவர் களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்துக்குத் தேவையான உதவியை, காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு "மாற்றுப் பண்டங் களாக' உருவாக்கித் தந்துவிடுகிறாள் ஸ்வதா தேவி.



    
நமது முன்னோர்கள் பிதுர் லோகத்தில் மிகவும் தாகமாகவும் பசியாகவும் இருப்பார்கள். நாம் விடும் தர்ப்பண நீரே அவர்களின் தாகத்தையும் பசியையும் போக்கக் கூடியது. ஓவ்வொரு பித்ருவும் நம்முடைய வாரிசுகள் பிள்ளைகள் நமது தாகம் தீர்க்க மாட்டார்களா என்று காத்திருப்பார்கள். அவர்களின் தாகம் தீர்க்காத பட்சத்தில் கோபம் அடைவார்கள். இதைத்தான் பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். இந்த பித்ரு தோஷம் ஜாதகத்தில் அமைந்தால் புத்திரபாக்கியம் போன்றவை கிட்டாது. இந்த மஹாளய பட்சத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துவதால் மட்டுமே இந்த தோஷங்கள் படிப்படியாக விலகும். பொதுவாக அமாவாஸ்யை சிரார்த்தம் போன்ற தினங்களில் வாசலில் கோலம் இடுதல் கூடாது. அன்று பித்ருக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அவர்களுக்கு உணவளித்த பிறகே மற்றவர்க்கு என்பதால் நாமும் விரதம் இருக்கிறோம். கோலம் இட்டால் பூச்சிகள் எறும்புகள் அதை உண்ணும். இதனால் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் குறைகிறது என்ற காரணம் சொல்லப்படுகிறது. இதே போல பெண்கள் சிரார்த்தம் முடியும் வரை திலகம் இடுதல் கூடாது. ஆண்கள் தலைவாரிக்கொள்ளுதல், அலங்காரப் படுத்தி கொள்ளுதல் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பாக கிருஷ்ணபட்சம் பிரதமையிலிருந்து அமாவாசை வரை பதினைந்து திதிகளிலும் தினசரி தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.
           இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த அமாவாஸ்யை தர்ப்பணத்தை மஹாளய பட்சமான 15 தினங்கள் செய்யாவிடினும் மஹாளய அமாவாசை அன்று செய்து நம் முன்னோர்களின் ஆசியை பெறுவோமாக!

(படித்து தொகுத்தது)


Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2