நம்பிக்கை அளிக்கும் ஜனாதிபதி உரை! கதம்ப சோறு! பகுதி 39

கதம்ப சோறு பகுதி 39


நம்பிக்கை அளிக்கும் ஜனாதிபதி உரை!
         மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்கி இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தி உள்ளார். இதில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை மோடி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் புதிதாக 100 நகரங்களை உருவாக்குதல் என்பது அதில் ஒன்று. இதைத்தவிர புதிய மின்சாரக் கொள்கை, கங்கை நதி சுத்தப்படுத்துதல், அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் அமைத்தல், இளைஞர்கள் மேம்பாட்டுதிட்டம், ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் என்ற புதிய நீர்ப்பாசன திட்டம், குடும்பத்துக்கு ஒரு வீடு என்ற திட்டம், வைர நாற்கர திட்டம் என்ற ரயில்பாதை திட்டம் ஆகியன முக்கியமானவை. திட்டங்கள் கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றன. இவை எந்த அளவிற்கு செயல்படுத்தப்படும். இதில் ஊழல்கள் இல்லாமல் மக்களை முழுமையான அளவில் சென்று சேருமா? போன்றவையெல்லாம் இனிதான் பார்க்க வேண்டும். முந்தைய அரசுடன் மோதல் போக்கினை கையாண்ட தமிழக முதல்வர் இப்போது இந்த உரையை வரவேற்று நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று பாராட்டியுள்ளார்.  எதிர்கட்சிகளும் பெரிய அளவில் இந்த உரையை தூற்றவில்லை! எனவே மோடி அரசு நல்ல பாதையில் செல்கிறது என்றுதான் தோன்றுகிறது. பார்ப்போம்.

பியாஸ் நதி சோகம்!
    விபத்து, மரணங்கள் இல்லாத நாள் இருக்காது போலிருக்கிறது. இமாசல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஆந்திர பொறியியல் மாணவர்கள் அங்கு பியாஸ் என்னும் நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்பதை படிக்கும்போதே நெஞ்சம் பதறியது. ஒவ்வொரு பிள்ளைகளையும் எத்தனையோ கனவுகளுடன் வளர்க்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் இதையெல்லாம் கொஞ்சம் கூட நினைவில் நிறுத்துவது இல்லை என்பது பரிதாபத்துக்கு உரியது. பியாஸ் நதியின் மையப்பகுதியில் இருந்த பாறை ஒன்றுக்கு சென்று புகைப்படம் எடுக்க விரும்பி அங்கே சென்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுக்கும் சமயம் அருகேயுள்ள அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட திடீர் வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். மொத்தத்தில் சுற்றுலா சோக உலாவாக மாறிவிட்டது. சுற்றுலா அழைத்துச்சென்றவர்களுக்கும் பொறுப்பில்லை! அங்குள்ள அணை நிர்வாகத்தினரும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளனர். வெளியூர் செல்லும்போது பாதுகாப்பாக  கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இந்த மாணவர்களிடம் இல்லாமல் அவர்கள் பயின்று என்ன பயன்?

திருவள்ளூரை தாக்கிய சூரைக்காற்று!
    கடந்த ஞாயிறன்று இரவு திருவள்ளூர், சென்னை, காஞ்சி பகுதியில் திடீரென கடும் மழையுடன் சூரைக்காற்று வீசத்தொடங்கியது. இதனால் பலமரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. மாவட்டத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் அறுந்து விழுந்ததால் மின்சார விநியோகம் தடைபட்டது. இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் பல இடங்களில் தடைபட்ட மின்சாரம் வரவில்லை. மிகவும் மெத்தனமாக மாவட்ட நிர்வாகம் இயங்குவது வேதனைக்குரியது.
எங்கள் ஊரையும் அருகில் உள்ள நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலை ஓரமாக ஐந்தாறு மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை ஓர மின்கம்பங்கள் அனைத்தும் முறிந்துவிட்டன. அவை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளன. திங்களன்று அடிப்படைத் தேவையான குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். பேரிடர் சீரமைக்கும் பணியில் நம்மவர்களுக்கு இன்னும் போதிய பயிற்சி இல்லை என்பதையே இந்த திடீர் சூரைக்காற்று உணர்த்திச் சென்றது.


டீ.வி கார்னர்:
    வழக்கம் போல இந்த வாரம் சரியாக டீவி முன் உட்காரவில்லை! வாரத்தில் ஓரிரு நாட்கள் சில மணி நேரங்களே டீவி முன் அமர்வது. அதுவும் இந்த வாரம் சரிபட்டுவரவில்லை. சன் டீவியில் ஒரு நாள் நாதஸ்வரம் சீரியல் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருந்தது. அதில் கோபி கேரக்டர் அநியாயத்திற்கு நல்லவர் கேரக்டராக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா பழியையையும் ஏற்றுக்கொண்டு தியாகச்சிகரமாக மிளிர்கிறார் கோபி. மவுலி தன் திறமையான நடிப்பால் அசத்துகிறார். இதில் கோபியின் அத்தை கேரக்டருக்கு இதுவரை நடித்து கொண்டிருந்தவர் வேறு சீரியலுக்கு மாறிவிட்டார் போல இப்போது போட்டிருக்கும் பெண்மணி கோபிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிறார். ஆளைத்தான் மாற்றுகிறார்கள் சரி பொருத்தமானவர்களையாவது மாற்றலாம் அல்லவா? இது எப்படி தெரியும் நீதான் சீரியல் பார்ப்பது இல்லையே என்று கேட்காதீர்கள். உடன் பார்த்து கொண்டிருந்தவர்கள் புலம்பலைக் கேட்டு விசாரித்து எழுதுகின்றேன். இதைத்தவிர ஒருநாள் கேடீவியில் மிரட்டல் என்றொரு சினிமா கொஞ்ச நேரம் பார்த்தேன். இப்படியெல்லாம் சினிமா எடுத்து எதற்கு காசை விரயம் செய்கிறார்கள் என்று தோன்றியது. என் தூக்கமும் கெட்டுப்போனது. அருகில் வீட்டம்மணி பார்த்துக் கொண்டிருந்ததால் நிறுத்த சொல்லவும் முடியவில்லை.
   
கிச்சன் கார்னர்:
 லெமன் தொன்னை இட்லி

தமிழர்களுக்கு மிகவும் பிடித்த காலை உணவு இட்லி. அதிலும் பல வெரைட்டிகள் செய்து அசத்துகிறார்கள். என் சகோதரியார் பகிர்ந்து கொண்ட இந்த இட்லியை செய்து சுவைத்துப்பாருங்கள்.

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி 1 கப், உளுந்து ½ கப் எலுமிச்சம்பழம் 1, பச்சை மிளகாய் 5 , இஞ்சி சிறு துண்டு. மிளகு சீரகம் தலா ½ டீஸ்பூன், கறிவேப்பிலை 1 கொத்து, முந்திரிப்பருப்பு 10 (தேவைப்பட்டால் ) எண்ணெய் தேவையான அளவு.
    செய்முறை: அரிசி உளுந்தை தனித்தனியே இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ள வேண்டும். அரிசியை கரகரப்பாகவும், உளுந்தை நைசாகவும் அரைக்க வேண்டும். உப்பு எலுமிச்சை சாறு கலந்து விடவும். இஞ்சித்துருவல் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு சீரகப்பொடியை சேர்த்துக் கொள்ளவும். முந்திரியை வறுத்து மாவில் போடவும். வாழை இலையில் தொன்னை மாதிரி செய்து உள்ளே எண்ணெய் தடவி மாவை அதில் ஊற்றி இட்லி பானையில் வைக்கவும். இப்போது ஆவியில் வேகவிடவும். சில நிமிடங்களில் எடுத்து பறிமாறவும்.
தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி பெஸ்ட், தேவைப்பட்டால் சட்னி அரைத்துக் கொள்ளவும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

இரவு நேரங்களில் அணியும் ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புக்களை வீட்டிற்குள் உதறக் கூடாது. உணவுப் பண்டங்களை படுக்கையறையில் பறிமாறுதல்சாப்பிடுதல் கூடாது. இதனால் நூல் புழுக்கள் நம் உடலில் புகும் அபாயம் உண்டு.

சமையல் சிலிண்டரை ஆட்டி ஆட்டி கடைசி துளி வரை உபயோகிக்கிறீர்களா? இனி அப்படி செய்யாதீர்கள். எரிவாயுவை சுத்தமாக காலி செய்யும் பொழுது அதில் உள்ள காற்றழுத்தம் வெளியில் இருப்பதை விட குறைவதால் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

மிக்சி ஜார்களை அரைத்தவுடன் அதிக நேரம் காயவைக்காமல் அல்லது சிங்கில் போடாமல் உடனே அலசி தனித்தனியாக கவிழ்த்து வைத்து உலர்த்தி பராமரித்தால் நீண்ட நாட்கள் உழைக்கும்.

கருஞ்சீரகம் நூறுகிராம் வாங்கி பொடித்து காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் தூளை அரை டீஸ்பூன் தேனில் குழப்பி ஏழு நாட்கள் சாப்பிட  சிறுநீரக கற்கள் கரைந்து சிறு நீருடன் வெளியேறும்.

உங்கள் ஃப்ளாஸ்க் அழுக்காக இருக்கிறதா? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவும் பிறகு வேறு நீரால் கழுவினால் ஃப்ளாஸ்க் சுத்தமாக புதுசாக மாறிவிடும்.

துடைப்பம் உபயோகப்படுத்தும் போது மேல் கீழ் வழியாக குச்சி உருவாமல் இருக்க பழைய சாக்ஸை மேலே நுழைத்துக் கட்டிவிட்டால் பல காலம் துடைப்பம் உழைக்கும்.

 என் நூலகம்:
    மஞ்சள் ஆறு
எழுதியவர் சாண்டில்யன். வெளியீடு வானதி பதிப்பகம்.
 
  இளம் வயதில் இருந்தே சாண்டில்யன் நாவல்கள் மேல் ஒரு அபிமானம் எனக்குண்டு. எனென்றால் வரலாறு எனக்கு ரொம்ப பிடிக்கும். சாண்டில்யன் சுவாரஸ்யமாக வரலாற்றை எழுதியதால் அந்த எழுத்தும் எனக்குப் பிடித்துப் போயிற்று. அவ்வப்போது சாண்டில்யன் நாவல்கள் வாங்கும் பழக்கம் உண்டு.  ஒரு பழைய புத்தக கடையில் இந்த மஞ்சள் ஆறு நாவலை வாங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் இடையில் நிறுத்த தோன்றாத வகையில் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது நாவல். இந்திய வரலாற்றில் ராஜபுத்திரர்களின் பங்கு அளப்பரியது. இந்த நாவலும் ராஜபுத்திர வீரன் ஒருவனைப் பற்றியதுதான்.
   ராணா சங்கா என்ற ராஜபுத்திர மன்னனை பற்றி கேள்விப் பட்டு இருப்பீர்கள். முகலாயர்கள் நம் இந்தியாவில் காலூன்ற முற்பட்ட போது அவர்களுக்கு பெரும் சவாலாக முட்டுக்கட்டையாக இருந்தவன் இந்த ராஜபுத்திரவீரன். பல போர்களில் கலந்து கொண்டு ஒரு கண் மற்றும் ஒரு கையை இழந்து உடல் முழுவதும் 80 படுகாயங்களை பெற்று வீர மரணம் அடைந்தான் இந்த வீரன். இவனது வாழ்க்கையை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த நாவலைப் படித்தால் ராஜபுத்திரர்களின் மேல் உங்களுக்கு கண்டிப்பாக அபிமானம் ஏற்படும்.

இவர்களைத் தெரிந்து கொள்வோம்:

பத்தாவது படித்தவர் டாக்டரான ஜோக்குகளை ரசித்திருப்போம். உண்மையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஒருவர் வார்டுபாயாக சேர்ந்து இன்று கண்விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்துள்ளார் இவரைப்பற்றி இங்கு: வார்டுபாய் டூ கண்மருத்துவர்

கணவரின் நினைவாக நூலகம் கட்டிக்கொடுத்த மூதாட்டியைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கு: கணவர் நினைவாக நூலகம் அமைத்தவர்

படிச்சதில் பிடிச்சது

   ஜொள்ளும் கிள்ளும்!

ஒரு கணவனும் மனைவியும் துணிக்கடையின் லிப்டில் மாடிக்குச் சென்றார்கள்.
  ஒரு அழகிய பெண்ணும் லிப்டில் வந்தாள். கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அந்த அழகி அவனை அறைந்தாள்.
   கணவன் அதிர்ச்சி அடைந்தான். “ஏன் இப்ப என்னை அறைஞ்சே…?” என்று கேட்டான்.
  அதற்கு “எதுக்கு என் இடுப்பை இப்ப கிள்ளினே…?” என்கிறாள் அவள்.
  கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்ற அவமானம். அதோடு பயங்கர குழப்பம். லிப்டில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் வெளியேற அவன் தயங்கி நின்று கொண்டிருந்தான்.
  அப்போது அவன் மனைவி அவன் காதில் சொன்னாள். “ அதையே யோசிச்சிட்டு  இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்த எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்…!”
   இது எப்படி இருக்கு?


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதம்ப சோறு அளவு அதிகமாக உண்ட போதும் திகட்டவில்லை.
    சுவையான செய்திகள்

    ReplyDelete
  2. ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு வகையிலும் அருமை. நான் கல்கியின் வாசகன் எனினும் தங்களின் சாண்டியல்யன் புதினம் பற்றிய விமர்சனத்தை நன்கு ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  3. வழக்கம் போல் டிப்ஸ் அருமை.
    அந்த ஜோக் ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  4. அருமை, சுரேஷ்.
    நான் படிக்காத நாவல் மஞ்சள் ஆறு
    படிக்கப் பார்கிறேன்.
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    ReplyDelete
  5. //பழைய சாக்ஸை மேலே நுழைத்துக் கட்டிவிட்டால் பல காலம் துடைப்பம் உழைக்கும்.//

    அடேங்க்கப்பா எப்டில்லாம் TIPS கொடுக்குறீங்க - ஆமா வீடு நாறிடாது?

    ReplyDelete
  6. அனைத்து சுவைகளையும் கொண்ட கதம்ப சோறு அருமை !

    புதிய ஆட்சி வாய்ச்சொல் ஆட்சியாக மட்டும் நில்லாமல் நல்லாட்சியாக திக‌ழ்ந்தால் மகிழ்ச்சிதான் !

    விபத்துகளை தவிர்க்க நீண்டகால நடவடிக்கை எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவு அவசியம் பேரிடர் சமயங்களில் நடந்துகொள்ளவேண்டிய முறைகளைகற்றுவிப்பது !

    டிவியும், சினிமாவும்... வேணாம் விடுங்க சார் !
    ( நமது சமூகத்தில் இந்த ஊடகங்களினால் உண்டான சீரழிவுகளை அல்லது சமூக சீரழிவுகளில் இவற்றின் பங்கை பற்றி எனது இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.

    பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html

    கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு !
    http://saamaaniyan.blogspot.fr/2013/12/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து உங்கள் கருத்துகளை பதியுங்கள் )

    லெமன் தொன்னை இட்லியை உடனடியாக சுவைக்க ஆசை !

    அத்தனை டிஸும் ஆஸம் !

    சாண்டில்யனின் நூல்களை படிக்க நெடுநாளாசை... இந்த முறை இந்தியா வரும்போது கட்டாயம் வாங்கிவிட வேண்டும் !

    விடாமுயற்சியும், நல்லெண்ணங்களும் நிறைந்த மாந்தர்கள் நம் காலத்திலும் இருக்கிறார்கள்தான் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  7. கதம்பமாலை நல்ல அலங்காரமாக இருந்தது

    ReplyDelete
  8. கதம்ப சோறு வழக்கம் போல சுவையாக.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!