மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!

மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!


புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும். இதற்கு முன் வரும் கிருஷ்ண பட்ச  (தேய்பிறை) பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு பின் வரும் சுக்லபட்ச பிரதமை வரை மஹாளய பட்சம் எனப்படும். இந்த பதினைந்து தினங்களில் நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணங்கள் செய்து தானங்கள் செய்து பின்னர் உணவருந்த வேண்டும். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணங்களே முக்கியத்துவம் பெறுவதால் மங்கலகாரியங்கள் செய்தல் கூடாது. 

சீமந்தம், வளைகாப்பு, நாமகரணம் போன்றவை விதிவிலக்குகள் ஆகும்.

     மஹாளய பட்சத்தில் மஹாபரணி, அஷ்டமி, ஏகாதசி போன்ற திதிகளில் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். மேலும் பிதுர் லோகத்தில் வாழும் பிதுர்கள் இந்த பதினைந்து தினங்கள் நம்மோடு நம் இல்லத்தில் வந்து தங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் தள்ளிப்போதல், குழந்தைப்பேறின்மை, சரியான வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவைகளுக்கு பிதுர் தோஷமே காரணம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
   வாழும் காலத்தில் பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் இறந்த பின்னரும் அவர்களது திதிகளை நினைவில் வைத்துக் கொண்டு சிரார்த்தங்கள் செய்து தர்ப்பணாதிகள் செய்து வர வேண்டும். ஒருவன் ஆண்டு ஒன்றிற்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன.
     நம் முன்னோர்களும் இதை தவறாது கடைபிடித்து வந்தார்கள். தற்போது இயந்திர உலகில் சிரார்த்தம் செய்வது கூட ஒரு கடமை என்ற அளவில் உள்ளது. இதுவே துன்பங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.
பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர்.   நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

 மஹாளய பட்சம் பதினைந்து தினங்கள் தர்ப்பணம் செய்யாவிடினும் கூட  தாய்- தந்தையர் திதி நாட்களிலும் அமாவாசை நாளிலுமாவது தர்ப்பணம் செய்து தானங்கள் செய்யலாம்.    

   இந்த நாளில் அருகில் ஆலயங்களுக்கு சென்று குளக்கரையில் நம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடுவோமாக!

சிரார்த்தம் செய்வது பற்றிய குறிப்புக்கள் அடங்கிய இணைப்பு:


(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Comments

  1. மஹாளய அமாவாசை குறித்து அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. மகாளய அமாவாசை அருமையான பதிவு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. மஹாளய அமாவாசை குறித்த தெளிவான தகவல்கள் பல அறிந்துகொண்டேன் நண்பரே...

    ReplyDelete
  4. அமாவாசை குறித்து அறியாத தகவல்களை அறிந்து கொண்டோம் சார்...

    ReplyDelete
  5. மஹாளய அமாவாசை நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்ர் சுரேஷ்

    ReplyDelete
  6. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. தகவல்களுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!