புத்தக சந்தையில் வெந்ததும் புதுவையின் அரசியலும்! கதம்ப சோறு பகுதி 1

கதம்ப சோறு!  பகுதி 1

சென்ற வருடம் வரை இந்த பகுதியை தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இடையில் நின்றுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.

ஆரோக்கிய அரசியல்!
        கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட்டார் அம்மா. ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் கொடுத்தார் என்று ஓர் சர்ச்சை எழ அதற்கு விளக்கம் கொடுத்தார். ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் தேர்வு செய்து இருக்கையில் அமர செய்கையில் அவர் விடுத்த அறிவிப்பும் நன்றாகத்தான் இருக்கிறது. ஸ்டாலினும் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார் என்று சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் தான் எதிர்கட்சிகள் எதிரிகட்சிகளாக இத்தனை நாள் பாவிக்கப்பட்டு இருந்தது. இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் நிலையை கொஞ்சம் மாற்றுவதாக அமைந்துள்ளது. ஆனால் கலைஞர் மட்டும் இன்னும் மாறாமல் பழைய சம்பவங்களை கிளறி அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். வெட்டிப் பிடிவாதங்களை இரு தரப்பும் கலைந்து  இணைந்து செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும். இதை உணர வேண்டும் இருதரப்பும்.

வண்டலூர் விஜயம்!
      மே மாத கடைசியில் வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றேன். நிறைய மாற்றங்கள் சென்ற தடவை சென்றதற்கும் தற்போதும். நிறைய பறவையினங்களை ரசிக்க முடிந்தது.  கூண்டுகளில் பறவைகள் பற்றிய குறிப்புகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்து இருந்தார்கள். சிங்க குட்டிகள் விளையாடும் இடம் என்ற இடத்தில் வெறும் கூண்டுதான் பார்க்க முடிந்தது. சிங்கம் தென்பட வில்லை. புலிகள் உண்டு உறங்கி கிடந்தன. நீண்ட தூர நடைபயணம்  கால்கள் வலித்தன. பேட்டரி கார் போன்றவற்றில் பயணித்தால் நிதானமாக ரசிக்க முடியாது. எனவே நடந்தே சுற்றினோம். உள்ளே ஆங்காங்கே குடிநீர் இருந்தாலும் சரியில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்வது நலம் பயக்கும். வெயில் கொளுத்தியதால் தாகம் அடங்கவில்லை. திண்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம். சிறு குழந்தைகள் பசியால் அவதிப்பட்டார்கள். வெளியே வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சுற்றிப் பார்க்கலாம் என்றார்கள் அவ்வளவு தூரம் திரும்ப நடந்து மீண்டும் நடக்க யாரால் முடியும். சில ஸ்நாக்ஸ் எடுத்து செல்ல அனுமதிக்கலாம். செல்போன் எடுத்து செல்ல கூட 25 ரூபாய் கட்டணம். கொஞ்சம் அதீதமான ஒன்று. இன்றைக்கு எல்லோரிடமும் கேமரா செல் இருக்கிறது. ஆனால் அதில் எல்லோராலும் தெளிவாக படம் பிடிக்க முடியுமா? கட்டணம் குறைக்கலாம். அல்லது தள்ளுபடி செய்யலாம். நடந்து நடந்து கால் வலித்து  திரும்பினோம். உள்ளே நல்ல உணவகம் ஏதும் இல்லாதது ஓர் குறை. தமிழ்நாடு டூரிசம் ஓட்டல் மட்டுமே இருக்கிறது. எனவே வண்டலூர் செல்ல நினைப்பவர்கள் கொஞ்சம் தக்க முன்னேற்பாடுடன் செல்வது நல்லது.


ஐ.பி.எல் போட்டிகள்!
       சென்னை அணி இல்லாதது இந்த வருட ஐ.பி. எல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் அந்த குறையை விராத் கோஹ்லி பூர்த்தி செய்து விட்டார். ஒரு சீசனில் நாலு சதம் உட்பட தொள்ளாயிரத்து சொச்சம் ரன்களை குவித்து அட்டகாசம் செய்துவிட்டார். இவரின் இந்த பார்ம் நீடித்தால் நிச்சயம் சச்சினை முந்திவிடுவார். குஜராத், புனே இரண்டு புதிய அணிகளில் குஜராத் ப்ளே ஆப் சுற்றுவரை முன்னேறியும் பைனலுக்கு செல்ல தவறிவிட்டது. சுழல்பந்தை மட்டுமே நம்பியிருந்ததால் இந்த சோகம். முக்கிய கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். தோனி புனே அணிக்கு தலைமை தாங்கியும் அது லீக் சுற்றை தாண்டவில்லை. அவரது வியூகங்கள் உடைந்து போய்விட்டது. புவனேஷ் குமார் எப்படி ஐ.பி,எல்லில் மட்டும் சிறப்பாக வீசுகிறார் என்று தெரியவில்லை.
புத்தக கண்காட்சி!

     ஞாயிறன்று மதியம் 2.மணிக்கு வானவல்லி நாவல் வெளியீடு என்று முகநூலில் நண்பர் வெற்றிவேல் சொல்லியிருந்தார். முடிந்தால் கலந்துகொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் வீட்டில் கிளம்பும் போதே 2மணி ஆகிவிட்டது. நல்லவேளை உடனடியாக பேருந்துகள் கிடைத்து உயர்நீதிமன்றம் செல்கையில் 3.45 மணி. அங்கிருந்து ஓர் ஆட்டோ பிடித்து தீவுத்திடல் போப்பா என்றால் பொருட்காட்சி நடக்குதே அங்கையா? என்றார். இல்லப்பா புத்தக கண்காட்சி என்றேன். அதான் சார்! என்று கொண்டு விட்டார் 50 ரூ வாங்கிக் கொண்டு. ஆறாவது கேட் வழியாக உள்ளே செல்கையிலே சிற்றுண்டிகளின் வாசம் மணத்தன. நாவைக் கட்டுப்படுத்தி  டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தோம். உடன் மனைவியும் வர  670வது கடைசி ஸ்டாலில் இருந்து துவக்கினோம். வேகமாக சுற்றினாலும் வானதி ஸ்டாலை அடைய மாலை 5.15 ஆகிவிட்டது. அதற்குள் விழா முடிந்து வெற்றிவேல் கிளம்பிவிட்டிருந்தார். வானவல்லி நாவல் என்ன விலை? என்றேன். அருமை எழுதியிருக்காரு 24 வயசு பையந்தான் 2000 ரூபா! நாலுபாகம் இருக்கு. டிஸ்கவுண்ட் போக 1800 வரும் என்றார். தெரியும் நானும் ப்ளாக்கர்தான்.  வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு  முதல் நடை மேடையில் சுற்றி பார்த்துவிட்டு திரும்ப வந்து வானவல்லி வாங்கி கொண்டேன். விகடனில் நல்ல கூட்டம் இருந்தது. டிஸ்கவரி பேலஸ், உயிர்மை போன்றவற்றிலும் கூட்டம் குவிந்தது. குழந்தைகளுக்கு ஓவியம் வரைய ஓரு ஸ்டால் அங்கு நிறைய குழந்தைகள் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள். வெயில் அனலாய் கொளுத்தியது. ஏசி, பேன் எல்லாம் இருந்தாலும் எல்லோரும் வியர்வையில் நனைந்தார்கள். நிறைய தண்ணீர் குடித்தார்கள். நிறைய பேர் சுற்றி பார்த்தனர் ஒன்றும் வாங்கவில்லை. எனக்கு நிறைய வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பையில் பணமில்லை. வானவல்லி பட்ஜெட்டில் பெருமளவு சாப்பிட்டுவிட குழந்தைகள் புத்தகங்கள் சில அம்மணி எடுத்தார்.  விநாயக புராணம், கதைகடல் என்று பழைய கதை புத்தகம் சிலவற்றை வாங்கினேன். இன்னும் சிலது வாங்க வேண்டும் மீண்டும் ஒருமுறை இந்த வாரம் வர வேண்டும். இரண்டாயிரம் கொடுத்தா புத்தகம் வாங்கறீங்க அம்மா திட்ட போறாங்க! என்றார் வீட்டம்மணி. சக தோழர் எழுதி இருக்கார். நாம வாங்கி ஆதரிக்காம யார் ஆதரிப்பாங்க! அவருக்காக சில திட்டு வாங்கறதிலே தப்பே இல்லை என்று வானவல்லியை வாங்கிவிட்டேன். கேட்ட சிலருக்கும் பரிந்துரை செய்துள்ளேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை! படிக்க வேண்டும்.

புதுவை அரசியல்!
    காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிக்கிட்டு போனானாம் என்பார்கள் அதுபோல ஆகிவிட்டது புதுச்சேரி அரசியல். நமச்சிவாயம்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரும் சுழன்று பணியாற்றி வெற்றி பெற்று முதல்வர் கனவில் இருக்க உள் அரசியல் செய்து பதினைந்து நாள் நாராயண சாமி பதவி ஏறிவிட்டார். மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்கு நிகழ்ந்த அநியாயம் இது. மாநில அரசியலுக்கும் தேசிய தலைமை குறுக்கிட்ட இதுபோல மூன்றாம் நபர்களை நியமிப்பது காங்கிரஸிற்கு ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் தகுதியான ஒரு நபர் இருக்க நாராயணசாமிக்கு முதல்வர் பதவி வழங்கியதை மானமுள்ள எவனும் மன்னிக்க மாட்டான்.

டிப்ஸ்! டிப்ஸ்!
சொத்தைப் பல் உள்ளவர்கள் கிராம்பை தூள் செய்து கொண்ட பின் கற்பூரத்தையும் சிறிது சேர்த்து சில துளிகள் துளசிச் சாறில் குழைத்து சொத்தை பல்லின் மீது பூசி வந்தால் பல் வலி குறையும்.
சிறு குழந்தைகள் மண்ணில் விளையாடி விட்டு அப்படியே விரல் சூப்பும் இதனால் கிருமிகள் தொற்றும் வயிற்றில் பூச்சிகள் உண்டாகும். இந்த பூச்சிகளை ஒழிக்க வசம்புவை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் இந்த பொடியை தேனில் குழைத்து கொடுத்து வர குழந்தைகள் மலம் கழிக்கையில் பூச்சிகள் வெளியேறிவிடும்.
கடலைமாவு, அரிசி மாவு, கோதுமை மாவு இவற்றில் வண்டுகள் வராமல் இருக்க உப்புத் தூளை சிறு துணியில் முடிந்து போட்டு வைக்கலாம்.
செருப்பு ஷூ போன்றவை மழையில் நனைந்து ஈரமாகிவிட்டால் கழற்றி வைக்கையில் நியுஸ் பேப்பரை அதில் திணித்து வையுங்கள். நியூஸ் பேப்பர் ஈரம் உறிஞ்சியவுடம் வெயிலில் காய வைத்து சிறிது டால்கம் பவுடரை தூவி வைத்தால் துர்நாற்றம் வராது.

படித்து ரசித்தது!
    ஈரோடு  ரயில்வே நிலையத்தில் ஒரு முறை கி.வா.ஜவும் அவரது நண்பரும் உட்கார இடம் தேடினர். அவசரமாக நண்பர் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்தார். போச்சு சட்டை! காயாதிருந்த வர்ணம் பட்டை போட்டது. இப்போது கி.வா. ஜா சொன்னார், ஐயா! இது சாயச்சுவர், ஒட்டும். இதைப் போய் சாய சுவராக நினைத்து சாயலாமா?

படக்கவிதை!
வெங்கட நாகராஜ் அவர்கள் தன் தளத்தில் படம் போட்டு கவிதை எழுதச்சொல்லி வெளியிட்டு வருகின்றார். இந்த படம் என்னை கவர்ந்தது. அதற்கு என் கவிதை!

    சிறை வைத்த கம்பிக்கும்
    சிறை பிடிக்கிறாய் காட்சிகளை!
    துளிர்விடும் புன்னகையால்
    தூது விடுகின்றாய் தழுவிடும் தென்றலுக்கு!
    மின் வண்டியின் கூண்டுக்குள்ளும்
    அடைபடாது பயணிக்கின்றன
    அடங்காத உன் சிந்தனைகள்!
    கூண்டுக்கிளியாக முடங்காமல்
    கூவித் திரியும் சோலைக் கிளியாகிடுவாய்!
    சதுர கம்பிகளை கடந்து
    மதுரமாய் வழியும் உன் புன்னகை
    எல்லோருக்கும் தந்திடும் நன்னம்பிக்கை!


Comments

  1. நல்ல கெட்டிக் கதம்பம். மணக்கிறது. ரூ. 2,000/- ல் மொத்த புத்தக பட்ஜெட்டே என்னால் எல்லாம் நினைச்சுப் பார்க்க முடியாது! இதிலே ஒரு புத்தகம் 2,000 என்றால் யம்மாடியோவ்! :)

    ReplyDelete
  2. கதம்பம் மணத்தது கவிதையும் அருமை வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  3. வானவல்லி... வாங்கலாம் என்றால் வீட்டிலேயே ஒரு வில்லி தடுப்பாளே:)

    ReplyDelete
  4. மணக்கிறது கதம்பம். வண்டலூர் பற்றிய செய்திக்கு நன்றி. பலருக்கு உதவும்.

    ReplyDelete
  5. கவிதை மிக அருமை.

    இம்முறை புத்தகக் கண்காட்சி போகும் எண்ணம் இல்லை.

    வண்டலூர் பார்த்ததில்லை.

    ReplyDelete
  6. பேருந்தில் உயர்நீதி மன்றம் வந்து, அங்கிருந்து ஆட்டோவில் தீவுத்திடல் புத்தகக் கண்காட்சி அடைந்து, 'வானவல்லி' வாங்கி, "சக தோழர் எழுதியிருக்கிறார். அவருக்காக திட்டு வாங்க.."-- நெகிழ்ந்தேன்.

    'கருணையினால் அல்ல' என்று ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக் கதை நினைவுக்கு வந்த்து..

    ReplyDelete
  7. கதம்பம் அருமையான தொகுப்பு .கவிதை அழகு.

    ReplyDelete
  8. சிறப்பான கதம்பம். புகைப்படத்திற்கு கவிதை - பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!