தித்திக்கும் தமிழ்! பகுதி 28 .ஆனைமுகனைத் தொழுதிட அரியனவும் எளியன ஆகும்!

தித்திக்கும் தமிழ்!  பகுதி 28 .ஆனைமுகனைத் தொழுதிட அரியனவும் எளியன ஆகும்!


    எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்பு விநாயகர் பூஜை செய்து தொடங்குவது முன்னோர்கள் வழக்கம். ஓங்கார நாயகனான விநாயகனைத் தொழுது தொடங்கும் செயல்கள் சிறப்பாக முடியும் என்பது கண்கூடு. ஏடெடுத்து எழுதுகையிலும் பிள்ளையார் சுழியோடு துவங்குகிறோம். கணபதியைத் தொழுதிட கஷ்டங்கள் அகலும் கடினமான செயல்கள் கூட எளிமையாக முடியும். இதை ஒளவையார் அழகான பாடல் ஒன்றில் விளக்குகின்றார்.

   முன்னொரு காலத்தில்  சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமானும் கைலாயத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் ஔவையாரையும் அழைத்துச் செல்ல விரும்பி அழைத்தனர். அவ்வமயம் ஔவையார் விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்தார். தாம் செய்து கொண்டிருந்த விநாயகர் பூஜையை செய்து முடித்துவிட்டு வருவதாக அவர்களிடம் கூறினார்.

   அவர்களுடன் செல்ல வேண்டுமே என்று அவசர அவசரமாக விநாயகர் பூஜையை ஔவையார் செய்யத் தொடங்கினார். அப்போது விநாயகப் பெருமான் ஔவையிடம், ஔவையே! பூஜையை நிதானமாகச் செய்! அவ்விருவர்களுக்கு முன்னதாக உன்னை கைலாயத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் என்று சொல்லி அருளினார். அப்போது விநாயகர் அகவலான சீதக்களப செந்தாமரை போம்! என்ற அகவலைப் பாடி துதித்து பூஜை செய்தார் ஔவையார்.

  விநாயகப் பெருமான் அகம் மகிழ்ந்து ஔவை பாட்டியை தன் துதிக்கையால் தூக்கி கைலாயத்தில் இறக்கினார். பின்னர் அங்கு வந்த சேரமானும் சுந்தரரும் தமக்கு முன் ஔவை அங்கிருக்க கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

   சேரமான், ஔவையிடம் இது எப்படி சாத்தியம் ஆயிற்று? என்று வினவினார். அப்போது ஔவை பாடிய பாடல் இது…


   மதுரமொழி நல் உமையாள் சிறுவன் மலரடியை
   முதிரநினைய வல்லார்க்கு அரிதோ? முகில்போல் முழங்கி
    அதிரவருகின்ற யானையும் தேருமதன் பின் சென்ற
    குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

 உயர்ந்த சேரர் குடியில் பிறந்த மன்னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையின் மகனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எந்த செயலையும் செய்வதற்கு அரியதாகாது. ஆதலால்தான் நான் இங்கு வந்திருப்பது அரியதன்று. மேகம் போல் முழங்கி நிலம் அதிரச் செல்லும் யானையும் தேரும் அதன் பின்னே செல்லும் குதிரையும் நாழிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும்.  நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்து வந்தது காத வழியே ஆகும்.

  சேரர் முதலானோர் நாழிகைக்கு காதவழி நடந்தனர். மூதாட்டியான ஔவையோ விநாயகரின் தும்பிக்கை வழியாக ஏறி காது வழியாக கைலாயத்தை வந்தடைந்தார் என்று பொருள் கொள்ளலாம்.

   யானை முகத்தானின் அருளால் ஔவை பாட்டியும் காதவழி கடக்க முடிந்தது கைலாயத்திற்கு சுந்தரர், சேர மன்னருக்கு முன் செல்ல முடிந்தது.
  இவ்வாறு விநாயகரின் பெருமையை அருஐயாக உணர்த்துகின்றார் ஔவையார்.  
விநாயகச் சதுர்த்தி நாளில் விநாயகரைத் தொழுது நலம் பெறுவோம்!


Comments

  1. இலக்கியச் சுவையோடு ஒரு பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு.

    நன்றி.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான கதை.

    ReplyDelete
  4. அற்புதமான சிறப்புப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றாக அலசியுள்ளீர்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான கதை அதுவும் இலக்கியத்துடன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2